இன்றைய தமிழர்களின் வாழ்வில் தாய்மொழியின் முக்கியத்துவத்தை அதிகரிக்கும் வழிகள்.

இன்றைய தமிழர்களின் வாழ்வில் தாய்மொழிக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் என்ன ? அதனை அதிகரிக்க என்னென்ன வழிமுறைகளைக் கையாளலாம் ?



முன்னுரை :
தமிழ் மொழி உலகிலயே மிக தொன்மையான மொழிகளில் ஒன்று என்பது நாம் அனைவரும் அறிந்தது. நாகரிகம் தோன்றி இரண்டாயிரம் வருடங்கள் தான் ஆன போதிலும் , இருபதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தோன்றியது தமிழ்மொழி என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள் . உலகில் முதன்முதலாக பேசப்பட்ட மொழி நம் " தமிழ் மொழி " தான் என்று சமிபத்திய ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது . தமிழ் உலகமொழி மட்டுமல்ல , உலக மொழிகளுக்கெல்லாம் தாய் மொழி நம் தமிழ்மொழி தான். செம்மொழியான தமிழ்மொழியின் சிறப்புகளையும் அவை எவ்வாறு குறைந்தது என்பதையும் காண்போம்.
குமரிக்கண்டம் :
குமரிக்கண்டத்தில் தான் உலகின் முதல் மாந்தன் பிறந்ததாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இங்கு தான் தமிழ் மொழியும் பிறந்துள்ளது. இன்று தனி நாடுகளாக இருக்கும் ஆஸ்திரேலியா , தென் ஆப்ரிக்க, இலங்கை மற்றும் பல தீவுகள் எல்லாம் சேர்ந்து பிரம்மாண்டமாக இருந்த இந்த குமரிக்கண்டம் , இன்று கடலுக்கடியில் அமைதியாக உறங்கிக்கொண்டிருகிறது. தமிழின் முதல் சங்கம் குமரிக்கண்டத்தில் இருந்த " தென் மதுரையில்" தோன்றியதாக பல நூல்கள் குறிப்பிடுகிறது . அத்தகைய சிறப்பு வாய்ந்தது நம் தமிழ் மொழி.
தமிழ் மொழியின் சிறப்பு :
எந்த மொழியிலும் இல்லாத வகையில் , சிலபத்திகாரம், மணிமேகலை , சிவகசிந்தமணி ,வளையாபதி, குண்டலகேசி போன்ற இல்லகியங்கள் இருப்பது தமிழ் மொழியில் மட்டும் தான். அதுமட்டுமில்லாமல் கலைகளை இயல்,இசை, நாடகம் என்றும், எழுத்துக்களை உயிர், மெய், உயிர்மெய் என்றும் பிரிக்கப்பட்டுள்ளது தமிழில் மட்டும் தான். மேலும் இலக்கியத்தை அகம் , புறம் என்றும், நிலங்களை குறுஞ்சி, முல்லை , மருதம் , நெய்தல் , பாலை எனவும் பிரிக்கப்பட்டுள்ளது இம்மொழியின் சிறப்பு. மேலும் திருக்குறளில் கூறப்பட்டுள்ள கருத்துக்கள் அனைவருக்கும் , அனைத்துக் காலக்கட்டங்களிலும் பொருந்தும்வகையில் எழுதப்பட்டுள்ளது . தமிழ் மொழி தமிழ்நாட்டில் மட்டுமின்றி புதுச்சேரியிலும் பேசப்படுகிறது. அதுமட்டுமின்றி சிங்கப்பூர், இலங்கை அகிய நாடுகளிலும் பேசப்படுகிறது.
தமிழின் பெயர்கள் :
தமிழை புலவர்கள், அமுதத் தமிழ் , இன்பத் தமிழ் , கனித் தமிழ் , தேன்தமிழ், பைந்தமிழ் , முத்தமிழ் , சங்கத்தமிழ் , செந்தமிழ் இப்படி சொல்லிக்கொண்டே போகும் வகையில் போற்றி இருக்கின்றனர்.
தமிழின் முக்கியத்துவம் குறைந்ததற்கு யார் காரணம் ?
இத்தகைய சிறப்பு வாய்ந்த மொழியின் முக்கியத்துவம், இன்றைய தமிழர்களின் வாழ்வில் குறைந்துள்ளதாகவே கருதுகிறோம். தமிழின் முக்கியத்துவம் குறைந்ததற்கு காரணம் யாரென்று ஆராய்ந்துப் பார்த்தல் , வேதனையாகவே உள்ளது. ஆம் , தமிழின் முக்கியத்துவம் குறைந்ததற்கு முழு காரணம் , நம் தமிழர்களே ஆவர். வேற்று மொழிகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பது மட்டுமின்றி, ஆங்கிலம் போன்று பிற மொழிகள் பேசினால் தான் அறிவாளிகள் என்ற தவறான புரிதலே இதற்க்கு காரணம் . மொழியின் முக்கியத்துவம் குறைந்திருக்கும் போது , கண்டிப்பாக அம்மொழியின் வாயிலாக நாம் கற்ற கலை, இலக்கியம், கலாச்சாரம் அதனிலும் மாற்றம் ஏற்படுத்தியிருப்பதகவே தெரிகிறது.
தவறான புரிதல் :
ஆங்கிலத்தில் பேசினால் தான் மதிப்பு என்றும் , ஆங்கிலம் கற்றவர்களே அறிவாளிகள் எனவும் பலர் தவறாக நினைத்துக்கொண்டிருப்பதே இதற்கு காரணம் . வெளிநாட்டில் , திடிரென்று தாய்மொழியை கேட்க்கும் பொது வரும் அளவற்ற மகிழ்ச்சி ஏன் நம்மூரில் தாய் மொழியில் பேசும் பொது வருவதில்லை? இதற்கு பெயர் தான் போலித்தனம் . எங்கோ ஒரு நாட்டில் நாம் தாய் மொழியைக் கேட்க்கும்பொழுது , உண்மையான சந்தோஷம் நம்மையும் மீறி வெளிப்பட்டு , போலித்தனம உடைந்துவிடுகிறது.
மேற்க்கத்திய மோகம்:
தமிழர்கள் பெரும்பாலானோர் மேற்க்கத்திய உடைகள் உடுத்துவது , அவர்களின் பழக்க வழக்கங்களை பின்பற்றுவது , மேற்க்கத்திய சிகை அலங்காரங்கள் செய்வது ,அவர்களின் மொழியை திறம்பட பேசுவது போன்ற செயல்களை எல்லாம் சிறப்பாக செய்கின்றனர். ஏன் ? நம் நாட்டு உணவு பழக்க வழக்கங்கள் கூட இப்போது மாறிவிட்டது. யாரும் இதையெல்லாம் வேண்டாம் என்று கூறவில்லை , ஆனால் மேற்க்கத்திய நாடுகளை விட , நம் சொந்த மண்ணில் உள்ள பழமை வாய்ந்த ஆடல் , பாடல் போன்ற கலைகளை பின்பற்றுவது , அறிய பல இடங்களை அறிவது , பலவகையான சுவையான பலகாரங்களை செய்வது , வீரவிளையாட்டுக்கள் போன்றவற்றை பின்பற்றினால் தமிழின் சிறப்பு இன்னும் பல ஆண்டுகள் வேறு பல நாடுகள் போற்றும்படியும் இருக்கும். மேலும் வெளிநாட்டு பொருட்கள் மற்றும் உணவு வகைகளை இப்படி வெளிநாட்டு நிறுவங்களுக்கு எந்த விளம்பர செலவுமின்றி தமிழர்களே " புதுமை “ என்னும் பெயரில் விளம்பரபடுத்திவிடுகின்றனர் . இது வெளிநாட்டு நிறுவங்களுக்கு நல்ல ஒரு லாபத்தை ஏற்படுத்திக் கொடுக்கிறது .
மொழியை கற்பதில் ஆர்வமின்மை :
இன்றைய தமிழர்கள் தாய்மொழியை கற்பதில் ஆர்வமின்றி இருக்கின்றனர். பெரும்பாலானோர் தமிழில் நன்றாக பேசினாலும் கூட , தமிழில் எழுதவும் படிக்கவும் தெரிவதில்லை. ஆங்கிலம் பேசதெரியவில்லை என்றாலோ, அல்லது ஆங்கிலத்தில் தவறாக பேசினாலோ வெட்க்கப்படுபவர்கள், தாய் மொழியாம் தமிழ் மொழியை எழுத படிக்க தெரியவில்லை என்று துளி கூட வெட்க்கப்படுவதில்லை. இனி நம் தாய்மொழியாம் தமிழ்மொழியை எப்படி இனிவரும் தலைமுறையினரிடையே கொண்டுசேர்ப்பது என்பதை காண்போம்.
சிறுவயது முதலே மொழியை கற்றல் :
ஒரு மொழியின் மீது திடிரென்று ஈர்ப்பு வந்துவிடாது. சிறுவயதில் இருந்தே குழந்தைகளுக்கு பெற்றோர் தாய் மொழியாம் தமிழ் மொழியின் சிறப்பை உணர்த்திட வேண்டும். தமிழில் உள்ள நல்ல கதைகளையும், புத்தகங்களையும் வாங்கி கொடுக்க வேண்டும். தமிழில் உள்ள அறிஞர்களையும், தமிழ் இல்லகியங்களையும் எடுத்துரைக்க வேண்டும். தமிழில் உள்ள பழமை வாய்ந்த கோயில்கள் பற்றியும் , கட்டிட கலைகள் பற்றியும் , சிற்பக்கலைகள் பற்றியும் அவற்றின் சிறப்புக்களையும் எடுத்துரைக்க வேண்டும்.
இன்றைய காலகட்டத்தில் பல பள்ளிகளில் தமிழில் பேசுவது வழக்கில் இல்லை. பெற்றோர்களும் குழந்தைகள் ஆங்கிலம் போன்று பிற மொழிகள் கற்பதையே ஊக்குவிக்கின்றனர். இதனை பெருமையாகவும் கருதுகின்றனர். இதற்காக குழந்தைகளை பல பயிற்சி வகுப்புகளுக்கும் அனுப்புகின்றனர் . யாரும் பிறமொழிகளை கற்க வேண்டாம் என்று கூறவில்லை . ஆனால் அதே ஆர்வத்தோடு தமிழிலில் உள்ள பெருமைகளையும் அறியச் செய்யவேண்டும். பிற மொழிகள் கற்றபோதிலும் , தாய் மொழியின் சிறப்பை குழந்தைகள் அறிய செய்ய வேண்டும்.
தாய்மொழியில் சிந்திப்பதின் அவசியம்:
" சிந்திப்பது " மொழின் வழியாகத் தான் உள்ளது . மொழி இன்றி யாராலும் சிந்திக்க முடியாது. சிந்திப்பதற்கு மொழியே கருவியாக உள்ளது . அதேபோல் தான் பேச்சுத்திறன், ஒருவர் தான் சிந்தித்ததை , பிறருக்கு கூறுவது " பேச்சின் " வாயிலாக தான். அப்பேச்சு வெளிப்படுவது மொழியின் வாயிலாக தான். ஒரு குழந்தை , தாய் மொழியை தானாகவே கற்கிறது. தாய்மொழி அவ்வளவு எளிதாக ஒருவரது மனதில் பதிகிறது. தாய்மொழியில் சிந்திப்பதனால் கண்டிப்பாக ஒருவரது சிந்திக்கும் திறன் அதிகரிக்கும். சில கருத்துக்களை தாய் மொழியின் மூலமாகவே மிக வலுவாக கூறிடவும் மற்றவர் மனதில் பதியவைக்கவும் முடியும். அவ்வளவு வலிமை தாய்மொழிக்கு உண்டு. சிந்தனை , பேச்சு மட்டுமின்றி , தமிழ்மொழி சமூக அடையாளமாகவும் விளங்குகிறது.
புதிய எழுத்தாளர்களை கண்டறிதல் :
" தமிழின் மேன்மை அதன் தொன்மையில் இல்லை -தொடர்ச்சியில் உள்ளது."
தமிழில் புதிய எழுத்தாளர்களை கண்டறிதல் வேண்டும். அவர்களை தொடர்ந்து ஊக்குவித்தும், எழுதுவதற்கு ஒரு வழிமுறை அமைத்துக்கொடுத்தலும் அவசியம். இளம் எழுத்தாளர்கள் பலரை கண்டறிந்து, அவர்களின் கருத்துக்களை கேட்கலாம். கவியரங்கம், கருத்தரங்கம் போன்று நிகழ்ச்சிகளை ஒருங்கினைத்து புதிய சிந்தனைகளை பகிர்ந்துக் கொள்ளலாம். தமிழை பாடமாக கல்லூரிகளில் படித்தவர்கள் மட்டுமின்றி , வேறுதுறைகளில் இருந்து சிறப்பாக எழுதும் எழுத்தாளர்களை கண்டறிந்து, அவர்களை பாராட்டவும் செய்யலாம். தொடர்ந்து எழுதுவதற்கு வழிவகைகள் செய்யலாம்.
தமிழில் பெயர் சூட்டுதல் :
மொழிதான் ஒருவரின் அடையாளம் ஆகும். குழந்தைகளுக்கு அழகிய தமிழ் வார்த்தைகளில் பெயர் சூட்டலாம். குழந்தைகளுக்கு மட்டுமின்றி தொழில் நிறுவனங்கள், வணிக வளாகங்கள் ,திரைப்படங்கள் போன்றவற்றிற்கும் தமிழில் பெயர் சூட்டலாம். பள்ளிகளில் தமிழ் சொல் விளையாட்டுகள் நடத்துதல் , அலுவலகம் தவிர்த்து மற்ற இடங்களில் தமிழிலே உரையாடுதல், புத்தகங்களை பரிசளித்தல், தொலைக்காட்சிகளில் தமிழ் சார்ந்த போட்டிகளை நடத்துதல் , அழகாக தமிழில் கையெழுத்திட்டு பழகுதல், இவ்வாறு சிலவற்றை கடைப்பிடித்தல் சுலபமாக தமிழின் பெருமையை காக்கவும், தொடரவும் உதவும்.
தொழில்நுட்பக்கல்லுரிகளில் தமிழின் அவசியம்:
அறிவியல் , வேதியியல் , இயற்பியல் , உயிரியல், பொறியியல், மருத்துவம் போன்ற துறைகளில் தமிழை பயன்பாட்டு மொழியாகவும் கொண்டுவரலாம். இத்துறைகளில் பயன்படுத்தும் தமிழ் சொற்களை மாணவர்கள் அறிய செய்யவேண்டும். படிக்கும் துறை தான் தொழில் நுட்பம், தாய் மொழி தமிழ் மொழி என்பதை மறந்துவிடக் கூடாது . துறை எதுவானாலும் சரி, கல்லூரிகளில் தமிழின் அவசியத்தை உணர்த்திட முன் வரவேண்டும். கல்லூரிகளில் தமிழில் கவிதைப் போட்டி , கட்டுரைப் போட்டி , சொல் விளையாட்டு, போன்று போட்டிகள் நடத்திடல் வேண்டும். பள்ளியோடு முடிந்துவிடாமல் கல்லூரிகளிலும் தமிழின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்க வேண்டும் . இன்றைய மாணவர்கள் ஆங்கிலத்தை எப்படி கற்க்கிறார்களோ , அதுபோல் தமிழின் சிறப்புக்களையும் , பெருமைகளையும் உணர்ந்திடல் வேண்டும்.
அலுவகங்களில் தமிழின் அவசியம்:
அலுவகங்களில் நேரம் கிடைக்கும் பொழுது , தமிழ் விளையாட்டுகள் நடத்த வேண்டும். அலுவகங்களில் நுனிநாக்கு ஆங்கிலம் பேசும் அனைவரும், ஆங்கிலம் அலுவகத்தில் மட்டும் பேசும் மொழி எனவும் , தமிழ் தான் தன் தாய்மொழி என்று சிந்திக்க வேண்டும். நாம் எப்படி பிற மொழிகளை கற்றறிந்தோமோ , அதே போல் பிற மொழி பேசுபவரோடு , தமிழின் பெருமையும் பகிரலாம் .
தொழில்நுட்ப வல்லுனர்களின் பங்கு அவசியம் :
தொழில்நுட்பத்தில் பணியாற்றும் பொறியாளர்கள் பலருக்கு, தமிழின் ஆழம் பற்றி தெரியாது. அனால் தமிழின் ஆழமான பெருமையை கொண்டுசேர்ப்பதில் கைத்தேர்ந்தவர்கள். அவர்களுக்கு தமிழின் பெருமையை நாம் கொண்டுசேர்த்தோமானால் , தமிழின் பெருமையை கண்டிப்பாக வேறுக்கட்டத்திற்கு அவர்கள் கொண்டுசேர்ப்பார்கள்.
பெயர் பலகைகள்:
நம் ஊரில் உள்ள பல பெயர் பலகைகளில் , பெயர்கள் ஆங்கிலத்தில் பெரியதாகவும், தமிழில் மிக சிறியதாகவும் எழுதப்பட்டுள்ளது. நம் மொழின் பெருமையை ஒவ்வொருவரும் அறிந்திட வேண்டும். அப்படி அறிந்திருப்பாராயின் , கண்டிப்பாக அவரவர்களே தங்கள் கடை முன் இருக்கும் பெயர் பலகைகளில் , தமிழை பெரிதாகவும், ஆங்கில எழுத்தை சிறியதாகவும் மாற்றி அமைத்திட வேண்டும். ஒரு ஊரின் உள்ளே வேற்று மாநிலத்தவர் வரும் பொழுது, அவர்களே அவ்வூரின் மொழியினையும் , அம் மொழியின் சிறிப்பினையும் அறிந்து ஆச்சிரியப்படும் அளவிற்கு இருக்க வேண்டும்.
வாசித்தல் பழக்கம் :
இன்னும் பத்திரிகைகளில் மாணவர்களை கவரும் வகையில், தமிழ் சமந்தப்பட விளையாடுக்கள் மற்றும் பல தமிழ் தொடர்பான போட்டிகளை வைக்கலாம். தமிழின் தொன்மை பற்றியும் , தமிழின் சிறப்புக்கள் பற்றியும் எழுதலாம். ஒவ்வொரு வாரமும் ஒரு கோயில்கள் பற்றியும், அதன் கட்டிடக்கலை பற்றியும் தொடர்ச்சியாக எழுதலாம்.இது மாணவர்களை கவரும் வகையில்,அடுத்த வாரம் என்ன தகவல் தெரிந்துக்கொள்ள போகின்றோம் என்று ஆவலை ஏற்ப்படுத்தும் வகையில் இருக்க வேண்டும். அதுமட்டுமின்றி தமிழில் உள்ள புலவர்கள் பற்றியும், நூல்கள் பற்றியும் மாணவர்கள் ஆர்வத்தோடு கற்கும் வகையில் எழுதலாம். ஒவ்வொரு வாரமும் அதிலிருந்து ஒரு கேள்வியும், அக்கேள்விக்கு சரியான விடை அளிக்கும் மாணவர்களுக்கு பரிசுக்களையும் வழங்கலாம்.இது அவர்களின் ஆர்வத்தை கண்டிப்பாக அதிகரிக்கும். இதனோடு அவர்களுக்கு கவிதை என்றால் என்ன என்பதையும், கட்டுரை எப்படி எழுத வேண்டும் என்பதையும் விளக்கிய பின்பு, அதிலும் ஒரு போட்டியை அறிவிக்கலாம் . இவ்வாறு பள்ளிகள் மட்டுமின்றி நாமும் அவர்களுக்கு தமிழை கற்க வழி செய்யலாம் .
எங்கே தேடுவேன் தமிழை எங்கே தேடுவேன் :
தாய்மொழியாம் தமிழ்மொழியை எங்கும் தேட வேண்டாம் . பயிற்சி வகுப்புகளுக்கும் செல்ல வேண்டாம் . ஆராய்ச்சி ஏதும் செய்திட வேண்டாம். செந்தமிழினில் கூட பேச வேண்டாம் , நமக்கு தெரிந்த தமிழில் , அழகாக பேசினால் போதும். தமிழின் சிறப்பு பற்றி அறிந்தவர்கள் , அடுத்தவர்களுக்கு அழகாக எடுத்துரைத்தால் போதும். தமிழ் நூல்களை வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். தினமும் நீண்ட தூரம் பயணம் செய்வோர் தமிழ் புத்தகங்களை கையில் எடுத்துச் செல்லலாம் . வீட்டில் பல நூல்களை சேகரிக்கும் பழக்கத்தை வளர்த்துக்கொள்ளலாம் . தெரிந்தவர்களுக்கு புத்தகங்களை பரிசளிக்கலாம். சிறுவர்களுக்கு அவர்களுக்கு ஏற்றதுப்போல் சிறுகதை புத்தகங்களை பரிசளிக்கலாம் . தமிழில் பேசுவதை பெருமையாக நினைக்க வேண்டும். தமிழில் கையெழுத்திட்டு பழகலாம்.சிறுவர்களுக்கு தமிழில் உள்ள விடுகதைகள் , பழமொழிகள் , அதில் உள்ள அர்த்தம் ஆகியவற்றை எடுத்துக்கூறலாம் .
நூல்களை மொழிபெயர்க்க வேண்டும்:
தமிழில் உள்ள பெருமையை மற்ற நாடுகளுக்கு கொண்டுசேர்த்ததன் பங்கு வெளிநாட்டவருக்கும் உண்டு . அதே போல் தமிழில் உள்ள நூல்களை அனைத்து மொழிகளிலும் மொழிபெயர்க்க வேண்டும். திருக்குறளை முதலில் அனைத்து இந்திய மொழிகளிலும் மொழிபெயர்ப்பு செய்ய வேண்டும். இதே போல் தமிழில் உள்ள சிலப்பதிகாரம் போன்ற நூல்களை மற்ற நாட்டு மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்ய வேண்டும்.உலகில் உள்ள அனைத்து மொழிகளிலும் திருக்குறள் , சங்க இலக்கியங்களை மொழிபெயர்த்து , உலக மக்கள் வியக்கும் படி தமிழை கொண்டுசெல்லவேண்டும். அம்மொழிகளில் உள்ள மொழிபெயர்ப்பாளர்கள் திறம்பட இதனை செய்திடல் வேண்டும்.
நூல்களை கணினி மயமாக்குதல் :
திருக்குறள் , சிலபத்திகாரம் , கம்பராமாயணம் போன்ற தமிழில் உள்ள நூல்களை , மொழிபெயர்ப்பதுடன், கணினி மயமாக்குதல் அவசியம் . இதன் மூலம் உலக மக்கள் அனைவரும், இந்நூல்களை எளிய முறையில் படிக்க வழி செய்ய வேண்டும்.
இலக்கியத்தின் வாயிலாக தமிழை கற்றிடல் அவசியம் :
தமிழை இன்னுமும் ஆழமாக , அதன் முக்கியத்துவத்தை உணர்த்தி வளர்த்திட வேண்டும். இது தமிழர் ஆகிய நம் ஒவ்வொருவரின் கடமை என்பதை உணர்ந்திட வேண்டும். இல்லகியங்களின் வாயிலாக தமிழ் மொழியை கற்ப்பிக்க வேண்டும். இன்றைய இளைஞர்களுக்கு தேவையான அனைத்து கருத்துக்களும், நெறிகளும் சங்க இல்லகியத்தில் உள்ளது என்பதை அவர்கள் அறிய செய்யவேண்டும்.
தமிழ் ஒரு பிரம்மாண்டம் :
தமிழ் என்று சொல்லும்போதே அதில் ஒரு பிரம்மாண்டம் இருக்கிறது. ஆம், நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை வெளியிட்ட உலகில் ஒருமுறையாவது பார்க்கவேண்டிய இடங்களில் , இந்தியாவிலிருந்து இடம்பிடித்த ஒரே இடம் , நம் " தமிழ்நாடு " தான் என்பதில் பெருமிதம் கொள்வோம் . தமிழ்நாடு தேர்ந்தெடுக்கப்பட்டதன் காரணம் , தமிழர்களின் கலாச்சாரமும், பண்பாடும் மற்றும் இங்குள்ள சிறந்த கட்டிடகலைகளும் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
வாழ்வியல் மொழியாக தமிழ் மாறிடல் வேண்டும் :
தமிழ் எழுத , படிக்க மட்டுமில்லாமல் , வாழ்வியல் மொழியாக மாறவேண்டும். அதாவது , தமிழர்களின் கல்வி , மருத்துவம், கலை, தொழில்நுட்பம் , கணிதம், வங்கி, ஊடகங்கள் என அனைத்தும் தமிழில் செயல்ப்படவேண்டும். இவ்வாறு கொண்டுவருவதன் மூலமே தமிழ் மேலும் செழித்து வளரும். ஆராய்ச்சிகளும் தமிழில் மேற்கொள்ளபட வேண்டும் . கண்டிப்பாக இவ்வாறு தமிழை வாழ்வியல் மொழியாக ஆக்குவதன் மூலம் , நம் தமிழை அடுத்த ஒரு கட்டத்திற்கு எடுத்துச் செல்லலாம்.
முடிவுரை:
கலை, இல்லகியம், கலாச்சாரம் , அறிவியல், மருத்துவம் போன்ற அனைத்தையும் கற்றுக்கொடுத்த இத்தகு சிறப்பு வாய்ந்த தாய்மொழியாம் , தமிழ் மொழியின் பெருமையை தொடரச் செய்வது நம் ஒவ்வொரு தமிழனுக்கும் உள்ள கடமையாகும். "தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும்வகை செய்தல் வேண்டும்." என்றும் , " தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வீர் " என்றும் பாரதியார் கூறியது போல, அவரது கனவை நினைவாக்கும் விதத்தில் , தமிழை இவ்வுலகமெல்லாம் பரவ செய்தல் வேண்டும். மேலும் தமிழின் மேன்மை , அதன் தொன்மையில் இல்லை ,தொடர்ச்சியில் உள்ளது என்பதை அனைவரும் மனதில்கொண்டு செயல்பட வேண்டும். தமிழ், தமிழ் இலக்கியம், தமிழர் பண்பாடு, கலாச்சாரம் போன்று அனைத்துறைகளிலும் நாம் பதித்த முத்திரைகள் , ஒவ்வொரு தமிழனுக்கும் பூரிப்பையும், பெருமையையும் ஏற்ப்படுத்தும் . தமிழனுக்கு இவ்வளவு பெருமை சேர்த்த தமிழுக்கு, தமிழராகிய நாம் ஒவ்வொருவரும் இனி பெருமை சேர்ப்போம் . தமிழ்மொழி தான் தமிழனுக்கு முகவரி என்பதில் பெருமைகொள்வோம் . தமிழ் மொழியை நேசிப்போம் , தமிழ் மொழியையே சுவாசிக்கவும் செய்வோம் .தமிழை இனி தினம் தினம் கொண்டாடுவோம் . "தமிழன் என்று சொல்லடா , தலை நிமிர்ந்து நில்லடா.......”
வாழ்க தமிழ் , வளர்க தமிழ் !!!
நன்றி - பமீலா சந்திரன்.

# https://www.facebook.com/TacticTamilnadu/posts/1232416273439887:0

Comments

Popular posts from this blog

இலங்கை பூர்வகுடி தமிழர்கள்...

உலகில் மதங்கள்